Sunday, June 20, 2010

ராவணன் ஏன் தோற்றான்....?

ராவணன் பற்றி பலவிதமான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தாலும், பலரின் முடிவுகள் ராவணன் ஒரு படு தோல்விப் படம் என்பதே ஆகும்.மணிரத்னம் ஏன் இப்படி ஒரு ஒரு கதையை தேர்வு செய்தார் என்பதே பெரும் குழப்பமாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கு பெரும்பாடு பட்டு போனால், மணி மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாக தந்தார். 

மணிரத்தினத்தின் தீவிர விசிறி என்பதால் அவரின் பெரும்பாலான படங்களை முதல் நாளே பார்த்து விடும் பழக்கம் உள்ளது.

மணிரத்தினத்தின் தனித்துவமே அவர் கையில் எடுக்கும் கதை கருதான்.சமூக அரசியல் பிரச்சனைகளை வேறு எந்த ஒரு தமிழ் இயக்குனரையும் விட ஒரு படைப்பாக்குவதில் கை தேர்ந்தவர்.ஆனால் அவரிடம் இருந்து இப்படி குழப்பம் வாய்ந்த ஒரு கதையை சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.சொல்ல நினைத்த எதையுமே  இதில் முழுவதுமாக அவரால் சொல்ல முடியவில்லை.அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

இந்த படத்தில் அவர் தற்போதைய மாவோயிஸ்டுகள் பற்றிய பிரச்சனையை கையில் எடுத்திருப்பார் என்று நினைத்தேன்.ஒரு வேளை அந்த எதிர்பார்ப்பு தான் பெரிய அலுப்பை படம் பார்க்கும் போது உண்டாக்கி இருக்குமோ என்று கூட அலசி பார்த்தேன். ஆனால் உண்மையிலேயே படத்தில் பல இடங்கள் மணிரத்தினத்தின் ரசிகனாக எரிச்சலையே ஏற்படுத்தியது.

படத்தின் முதல் எரிச்சல் விக்ரம் பக் பக் என்று பேச துவங்கும் போதே தொடங்கி...அவர் மண்டையில் டன் டன் என்று அடிக்கும் போது நமக்கும் சேர்த்து அடிப்பது போல் உள்ளது.
சுஹாசினியின் மேம்போக்கான வசனம் சுஜாதா வின் இழப்பை ஞாபகப்படுத்துகிறது.

மணிரத்தினம் தயவு செய்து உடனடியாக ஒரு வசன கர்த்தாவை கண்டுபிடிக்க  வேண்டும்.இப்படித்தான் குருவிற்கு அழகம் பெருமாளை வசனம் எழுத செய்து படத்தின் கம்பீரத்தையே கெடுத்தார்.இதில் சுகாசினி.

அடுத்த எரிச்சல் கார்த்திக்கின் அறிமுக காட்சி.சத்தியமாக இது மணிரத்னம் படம் தானா என்று சந்தேகமே வந்து விட்டது.கார்த்திக் மரத்திற்கு மரம் தாவும் போது, எது எதாவது குழந்தைகள் படமா இது என்று சந்தேகமே வந்துவிட்டது.அதன் பின்னர் கார்த்திக் அடிக்கும் அனைத்து மொக்கை காமெடியும் அதன் வசனங்களும் கடுப்பாக்குகின்றன.

அடுத்த எரிச்சல் உசுரே போகுதே பாடல். ஐஸ்வர்யாவை கண்ட ஐந்தே நிமிடங்களில் விக்ரம் பாடும் போது வருகிறது.மணிரத்னம் உண்மையிலேயே வைரமுத்துவின் வரிகளை கேட்டாரா என்று தெரியவில்லை.பார்த்த உடனே ஒரு பெண்ணை அவளிடம் பேசி பழகாமல், ஊடலுக்கு அழைக்கும் வரி உடைய பாடலை எப்படி அங்கே பொருத்தினார்கள் என்று புரியவில்லை.ஒரு வேளை மணிரத்னம், தமிழ் ரசிகர்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

இந்த படத்தின் இடம் பொருள் எதுவும் தமிழ் சூழலுக்கு பொருந்துவது போலவே இல்லை.மேகமலை என்பது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமம்.அதை எடுத்த உடனே திருநெல்வேலி என்று சொல்லும் தைரியம் எப்படி வந்தது என்று  தெரியவில்லை.மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் வெற்றியே எந்த விசயத்திலும் அதிக Detail போவதே ஆகும்.ஆனால் இதில் கதையிலோ, திரைகதையிலோ அவர் அப்படி போனது போல் தெரியவில்லை.

இதில் வீராவின்  பாத்திரப்  படைப்பே மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது.வீராவை ஏன் அரசாங்கமும் போலிசும் எதிர்க்கிறது என்பதை அழுத்தமாக சொல்ல தவறிவிட்டார்.ஒரு வேளை அதை எடுத்து பின் தன்னுடைய Corporate நண்பர்களுக்காக அந்த காட்சிகளை நீக்கி விட்டாரோ என்னவோ.

இந்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு  காரணம் கண்டிப்பாக அதன் பாத்திரப் படைப்புகளுக்கும், அவைகளின் செயல்பாடுகளுக்கும் உள்ள முரண்பாடுதான்.

ஆனால் படம் முழுவதும் ஒரு மெல்லிய காதல் இழை வழிந்தோடுகிறது.அது விக்ரம் ஐஸ்வர்யா ராய் மீது கொண்ட காதலும், ஐஸ்வர்யாவிற்கு விக்ரம் மீது ஏற்படும் மரியாதையும் ஈர்ப்பும், தன் கணவனின்  மீது உள்ள காதலும் நம்பிக்கையும் என்று மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு எரிச்சல்களையும் மீறி அதை ரசிக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு.அதை சத்தியமாக வார்த்தைகளால் சொல்லவே முடியாது.படத்தின் ஒளிப்பதிவும் இசையும் கை கொடுக்கா விட்டால், படம் கண்டிப்பாக பெரிய குப்பை தான்.

நம்மால் சீட்டில் உட்கார முடிவதற்கு ஒரே கரணம் இவை இரண்டும் தான்.

கன்னத்தில் முத்தமிட்டால் எடுத்தவரா இதை எடுத்தார் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை.

கதையை தேர்ந்தெடுப்பதிலும், திரைக்கதை உருவாக்குவதிலும் இப்படி கோட்டை விட்டுவிட்டு அதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தது மிகப் பெரிய தவறாகும்.

ரீமேக்குகள்(ராமாயணத்தின் remake) எப்போதுமே கை கொடுக்காது என்பதை மணிரத்னம் நன்றாக புரிந்து கொண்டு இருப்பார்.

ஹிட் பாடல்களும், விறுவிறுப்பான திருப்பங்களும் அதை காட்ட பலமான தொழில்நுட்பமும் மட்டும் இருந்தால் படம் வெற்றி அடையும் என்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் கண்டிப்பாக உணர்த்திருப்பார்.

இன்னும் மணிரத்னம் இப்படி ஒரு படம் எடுத்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.ஒரு வேளை ராவணனை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இல்லையா என்ற சந்தேகமே உள்ளது.

எப்படி இருந்தாலும் ஒரு பக்குவப்பட்ட ரசிகனை  சீட்டில் உட்கார வைக்க முடியாத படைப்பு கண்டிப்பாக தோல்வி அடைந்த ஒன்றே.

பாடல்களே இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் லட்சியம்.அதற்காக கொடு போட்டா , கெடா கெடா போன்ற பாடல்களை முழுவதுமாக வைத்து விட்டு காட்டு சிறுக்குயை தூக்கியது மகா கொடுமை.காட்டு சிறுக்கியின் இன்னொரு version படத்தில் வருகிறது.மிக மிக அற்புதமான படைப்பு ரகுமானிடம் இருந்து.

பின்னணி இசையில் பல இடங்களில் தெரிந்தாலும் இது அவரின் முழு திறமை காட்டப்பட்ட படம் அல்ல.

படத்தில் பலகாட்சிகள் மேம்போக்காக சென்று விடுகின்றன.அதற்கு வசனமும் ஒரு காரணம்.ஒன்றிரண்டு காட்சிகளை  தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை.

கடைசியில் ரகுமானின் நான் வருவேன் மட்டும் மனதில் கேட்டு கொண்டே உள்ளது.

ஆனால் ஒரு படத்தை பற்றி இவ்வளவு பேசுவதற்கு உள்ளதே பெரிய விஷயம்.மணிரத்தினம் என்ற உன்னத படைப்பாளியின் உழைப்பே அதற்கு காரணம்.

இணையம் முழுவதும் ராவணனை இப்படி கிழித்து தொங்க போட காரணம், இந்த உன்னத படைப்பாளியிடம்  அனைவரும் வைத்திருந்த பெரும் நம்பிக்கைதான்.ஆனால் அதில் ஒரு 50% கூட அவரால் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற கோபம் தான் இப்படி வெளிப்படுகிறது. 

நாங்கள் மணிரத்தினமிடமிருந்து ஒரு மெகா பட்ஜெட், பிரம்படமான படைப்பை எதிர் பார்ப்பதே இல்லை.எதார்த்தத்தை உள்ளதை உள்ள படியே கட்டும் சமூக  மற்றும் அரசியல் சார்ந்த படைப்பைத்தான்.அவரும் இதுநாள் வரை அப்படிபட்ட படைப்புகளைத்தான் ரோஜாவிலிருந்து குரு வரை கொடுத்துள்ளார்.அதை ராவணனில்
விட்டதே, அவரின் ரசிகர்களிடமே தோற்றதற்கு முக்கிய காரணம் . 





No comments:

Post a Comment

Add-Tamil